மகாராஷ்டிரா தவிர எல்லா மாநிலங்களுக்கும் பேருந்து சேவை தொடங்க நாட்டம்
பெங்களூரு: கர்நாடகாவில் இருந்து மகாராஷ்டிராவைத் தவிர வெளி மாநிலங்களுக்குப் பேருந்துச் சேவைகளைத் தொடங்கும்படி அதிகாரிகளுக்கு அந்த மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.
பெங்களூருவில் நடந்த போக்கு வரத்துத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர், கொரோனா கிருமித்தொற்று சூழலில் பேருந்துகளில் பயணம் செய்ய பொதுமக்கள் தயங்குவதாகத் தெரிவித்தார்.
ஆனால் பொதுமக்களின் இந்தப் பயத்தை அகற்றி அவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
கர்நாடகாவிற்கு மகாராஷ்டிர மாநிலம்தான் கவலை தருவதாக இருக்கிறது என்று குறிப்பிட்ட முதல்வர், மகாராஷ்டிராவில் கிருமித்தொற்று அதிகமாக இருப்பதையும் அங்கிருந்து கர்நாடகாவுக்குள் கிருமி நுழைவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதையும் சுட்டினார். கர்நாடகாவில் மொத்தம் 4,063 பேரைக் கிருமி தொற்றியுள்ளது. 53 பேர் பலியாகிவிட்டனர்.
கர்நாடகாவில் ஏற்கெனவே உள்ளூர் பேருந்துச் சேவைகள் தொடங்கி இருக்கின்றன. என்றாலும் அவை நட்டத்தில் இயங்கு வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் 10,110 கி.மீ. மாவட்டச் சாலைகளை மாநில நெடுஞ்சாலை களாகத் தரம் உயர்த்த முடிவு செய்து இருப்பதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.
அதே போல 1,650 கி.மீ. கிராமப்புற சாலைகள் மாவட்டச் சாலைகளாகத் தரம் உயரும் என்றும் அவர் தெரிவித்தார்.
கர்நாடகாவில் 4,813 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.