புதுடெல்லி: இந்தியாவில் நேற்றுக் காலை 8 மணி நிலவரப்படி, கொரோனா கிருமித்தொற்று காரணமாக மொத்தம் 6,075 பேர் மரணம் அடைந்துவிட்டார்கள்.
ஒரே நாளில் 9,304 பேரைக் கிருமி தொற்றியதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 216,919 ஆகியது. மொத்தம் 106,737 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் 104,106 பேர் குணமடைந்துவிட்டதாகவும் சுகாதார அமைச்சு கூறியது.
குணமடைவோரின் அளவு 48 விழுக்காடாக இருக்கிறது. புதன்கிழமை மட்டும் 260 பேர் பலியானார்கள். அவர்களில் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் 50 பேர்.
நாட்டில் மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரரேதம், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மரண எண்ணிக்கையைப் பொறுத்தவரை அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.
மகாராஷ்டிராவில் நேற்றுக் காலை 8 மணி நிலவரப்படி 74,800 பேரைக் கிருமி தொற்றி இருந்தது. இதில் தமிழ்நாடு அடுத்த இடத்தை வகிக்கிறது.
தமிழகத்தில் 25,872 பேரைக் கிருமி தொற்றி இருப்பதாக நேற்றுக் காலை தெரிந்தது. டெல்லி, குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசத்தில் தொற்று அதிகமாக உள்ளது.