மும்பை: மகாராஷ்டிராவைத் தாக்கிய நிசர்கா என்ற புயல் காரணமாக அந்த மாநிலத்தில் நான்கு பேர் மாண்டுவிட்டனர். எட்டு பேர் காயம் அடைந்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஏழு மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. சாலைகளிலும் வீடுகளிலும் ஏராளமான மரங்கள் விழுந்து கிடக்கின்றன. பல வீடுகளிலும் கூரைகளில் போடப்பட்டு இருந்த தகரங்கள் புயலில் அடித்துச் செல்லப்பட்டன. புதன்கிழமை புயல் தாக்கியதற்கு முன்னதாக அந்த ஏழு மாவட்டங்களையும் சேர்ந்த ஏறக்குறைய 85,000 பேர் அப்புறப்படுத்தப்பட்டு இருந்தனர். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவும் துணை முதல்வர் அஜித் பவாரும் நேற்று மதிப்பிட்டனர்.
மாவட்ட ஆட்சியர்கள், வட்டார ஆணையர்களுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக மீட்புப் பணிகளை நடத்தி முடிக்கும்படி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
“கொரோனா கிருமி அதிகமாக தொற்றி இருக்கும் மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது.
கொவிட்-19 கிருமியை எதிர்த்து அந்த மாநிலம் கடுமையாகப் போராடி வருகிறது. இந்த நிலையில் புயலும் சேர்ந்துகொண்டது.
“இருந்தாலும் மக்கள் ஐக்கியமாக, துணிச்சலாக எதிர்த்து நின்று இந்தப் பேரிடர்களைச் சமாளித்து வருகிறார்கள்,” என்று முதல்வர் தெரிவித்தார்.
இதற்காக மகாராஷ்டிர மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
மகாராஷ்டிராவைக் குறி வைத்த புயல் அந்த மாநிலத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் என்று அச்சம் நிலவியது என்றாலும் புயல் அடிக்கத் தொடங்கியதுமே காற்றின் வேகம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.
இருந்தாலும் குறைந்தபட்சம் 10,000 மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததாகவும் நேற்றும் மழையும் இலேசான காற்றும் தொடர்ந்து வீசியதாகவும் கூறப்பட்டது.