இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியைக் கடந்து ஓடும் யமுனா நதியின் நீர் தெளிவடைந்து வருகிறது. கொரோனா கிருமிப்பரவல் தொடர்பில் செயல்படுத்தப்படட தேசியநிலை முடக்கத்தால் பல ஆண்டுகளாக இந்த ஆற்றில் கழிவுப்பொருட்களை எறிந்துவந்த தொழிற்சாலைகள் அவ்வாறு செய்வதை நிறுத்தியுள்ளன.
இந்த ஆற்றைத் தூய்மைப்படுத்த அரசாங்கம் பல ஆண்டுகளாக எடுத்துவந்த முயற்சிகளைவிட மிகப் பெரிய பலனை இந்த முடக்கநிலை ஏற்படுத்தியுள்ளதாக கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். தமது வாழ்நாளில் இந்த ஆறு இவ்வளவு தூய்மையாக இருந்ததைப் பார்த்ததில்லை என்று 55 வயது இந்துத் துறவி திரு சஞ்சய் கிர் தெரிவித்தார்."இப்போது இந்நீரைக் குடிக்க முடிகிறது; வழிபாட்டுக்கும் பயன்படுத்த முடிகிறது," என்றார் அவர், புன்னகையுடன்.
இமய மலையிலிருந்து தொடங்கும் யமுனா நதி பிரயாகை நகரில் கங்கா நதியுடன் இணைகிறது. கொரோனா நோய்ப்பரவலின் தொடர்பில் உலகில் ஆகக் கடுமையான முடக்கநிலையைச் செயல்படுத்திய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதுவரை அங்கு 217,000 பேருக்கு இக்கிருமி தொற்றியுள்ளது. இதனால் அந்நாட்டில் 6,000 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.