மும்பை: இந்தியாவில் கெரோனா கட்டுப்பாட்டு நிபந்தனைகள் மீறப்படாமல் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதில் போலிசார் மிக முக்கிய பணியாற்றுகிறார்கள்.
அதே வேளையில், மருத்துவர்களும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களும் உயிர்நாடியான உதவிகளைச் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், கிருமிகள் இந்த இரண்டு வகை ஊழியர்களையும் குறி வைப்பதாகத் தெரிகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் சுமார் 2,557 போலிசாரை கிருமி தொற்றி இருக்கிறது. 30 பேருக்கும் அதிக போலிஸ் அதிகாரிகள் மரணம் அடைந்துவிட்டதாக போலிஸ் துறை தெரிவித்து உள்ளது.
அதேவேளையில், ஹைதராபாத்தில் மொத்தம் 48 முதுநிலை படிப்பு மருத்துவர்களைக் கிருமி தொற்றி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதிலும் குறிப்பிடத்தக்க அளவில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்களால் முடிந்தவரை பாடு பட்டு வருவதாகவும் போதிய பாதுகாப்பு இல்லாததால் கிருமி பாதிப்புக்குத் தாங்கள் ஆளாவதாகவும் கூறும் இத்தகைய ஊழியர்கள், சில இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டும் வருகிறார்கள்.
தங்களைக் கிருமி தொற்றினால் சிகிச்சை பெற தங்களால் முடிய வில்லை என்று கூறும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், சிகிச்சைக்கு ஆகும் செலவையும் தாங்களே ஏற்கவேண்டி இருப்பதாகவும் சொல்கிறார்கள். போதிய சாதனங்களும் வசதிகளும் மருத்துவமனைகளில் இல்லை என்றும் இவர்கள் கவலைப்படுகிறார்கள்.