சென்னை: தமிழ் நாட்டில் முதலீடு செய்யுமாறு டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் உட்பட உலகின் 11 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
உலகப் பொருளாதாரச் சூழலில் கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்திய விளைவுகளால் சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவுக்கு இடம்பெயர்த்திட முடிவு செய்துள்ளதாகவும் அந்த முதலீடுகளைத் தமிழகத்துக்கு ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்புப் பணிக்குழு ஒன்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வோக்ஸ்வாகன், ஸ்கோடா, மெர்சிடஸ் பென்ஸ், ஆடி, ஹொண்டா, டொயோட்டோ, பி.எம்.டபிள்யூ, லக்ஸ்ஜென் டயோயுவான், ஜாகுவார் லாண்ட்ரோவர், ஜெனரல் மோட்டார்ஸ், செவர்லெட், டெஸ்லா ஆகிய 11 நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என முதலமைச்சர் பழனிசாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தேவைகளுக்கேற்ப ஊக்கச் சலுகைகளும் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.