டெல்லி, மும்பையுடன் ஒப்பிடுகையில் மக்கள்தொகை பாதிதான் என்றாலும் பலி அதிகம்
புதுடெல்லி: இந்தியாவில் 1 கோடி பேருக்கும் அதிக மக்கள் வாழ்கின்ற மும்பை, டெல்லி போன்ற நகர்களில் கொரோனா கிருமித்தொற்று மிக அதிகமாகக் கூடி வருகிறது.
ஆனால் மரண விகிதத்தைப் பார்க்கையில், அந்த நகர்களின் மக்கள்தொகையில் ஏறக்குறைய பாதி அளவுக்கு மக்களைக் கொண்ட குஜராத்தின் அகமதாபாத் நகரம்தான் முதலிடத்தில் இருந்து வருகிறது.
மொத்தம் 50 மில்லியனுக்கும் அதிக மக்கள் வசிக்கும் ஐந்து நகர்களுடன் ஒப்பிடுகையில் ஒரு மில்லியன் பேருக்கு 115 பேர் என்ற விகிதத்தில் அகமதாபாத்தில் மரண அளவு இருக்கிறது.
இந்த அளவு, மும்பையில் ஒரு மில்லியன் பேருக்கு 80 பேர் மரணம் என்ற நிலையில் இருக்கிறது.
பெங்களூருதான் ஒரு மில்லியன் பேருக்கு ஒரு மரணம் என்ற அளவில் மரண அளவு மிகவும் குறைந்த நகராக இருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இதனிடையே, இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் பெருகிவிடவில்லை என்றாலும் அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்படக்கூடிய வாய்ப்பு இன்னமும் இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுநர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்நிலையில், இந்தியா, சீனா போன்ற நாடுகளில் அதிக பரிசோதனைகள் நடத்தினால் அங்கு கொரோனா கிருமித்தொற்று அமெரிக்காவைவிட அதிகமாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்தார்.
இவ்வேளையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றுக் காலை 8 மணி நிலவரப்படி 226,770 லிருந்து 236,657ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்தது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,348லிருந்து 6,642ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 114,073ஆக உயர்ந்துள்ள தாகவும் புள்ளிவிவரங்கள் தெரி வித்துள்ளன.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இத்தாலியை விஞ்சி 6வது இடத்தில் இந்தியா இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு தலைமை அலுவலகத்தின் சிறப்பு இயக்குநர் உட்பட ஊழியர்கள் ஐவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதனையடுத்து டெல்லி கான் மார்கெட் பகுதியில் உள்ள லோக் நாயக் பவனில் அமைந்துள்ள அமலாக்கப்பிரிவு தலைமை அலுவலகம் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டு உள்ளது.
அதேபோல, மத்திய சுகாதாரத் துறை அமைச்சிலும் கடந்த ஏழு நாட்களில் ஐவருக்கு தொற்று ஏற்பட்டதால் அந்த அமைச்சு இன்று ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட அமைச்சு கட்டடங்கள் முற்றிலும் சுத்தப்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் ஜூன், ஜூலையில் கிருமித்தொற்று உச்சத்தைத் தொடும் என்றும் பிறகு அது குறையத் தொடங்கும் என்றும் வல்லுநர்கள் பலரும் கணித்து இருக்கிறார்கள்.