கௌஹாத்தி: அசாம் மாநிலம் கௌஹாத்தியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் வயிற்றுவலிக்குச் சிகிச்சை பெறச் சென்ற ஓர் இளைஞர், கைபேசிக்கு மின்சாரத்தை ஏற்றும் மின்கம்பியை (சார்ஜர்) தவறுதலாக விழுங்கிவிட்டதாக தெரிவித்ததை அடுத்து மருத்துவர்கள் அவரின் வயிற்றைப் பரிசோதித்தனர்.
ஆனால் வயிற்றில் கம்பி எதுவும் இல்லை. இரைப்பைக் குடல் பகுதிகளிலும் எதுவும் இல்லை.
இதனால் குழப்பமடைந்த மருத்துவர்கள், அவரது வயிற்றுப் பகுதி முழுவதும் படம் எடுத்துப் பார்த்ததில் அவரது சிறுநீர்ப் பையில் மின் கம்பி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுநீர்ப் பையில் அறுவை சிகிச்சை செய்து அந்த கம்பியை மருத்துவர்கள் அகற்றினர்.
இது பற்றி கருத்து கூறிய அந்த மருத்துவமனையின் மருத்துவர் வலியுல் இஸ்லாம், அந்த இளைஞர் வாய் வழியாக மின்கம்பியை விழுங்கியிருக்க வாய்ப்பில்லை என்றும் என்ன காரணத்திற்காகவோ உண்மையை அவர் மறைப்பதாகவும் தெரிவித்தார்.