புதுடெல்லி: கொரோனா கிருமித் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஸ்பெயினை முந்தி இந்தியா 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
தற்போது கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2.46 லட்சமாக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
கிருமித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் அண்மைய சில நாட்களாக 'கொவிட்-19' நோய் தொற்றியோரின் எண்ணிக்கை தொடர்ந்து சீராக அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,971 பேருக்குப் புதிதாக நோய்த் தொற்றியது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை காலை தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை நாடு முழுவதும் 46 லட்சம் பேருக்கு நோய்த்தொற்றைக் கண்டறிய பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 17 பேருக்கு கொரோனா பாதிப்புள்ளதாகவும் உலகளவில் இந்த விகிதாச்சாரம் லட்சத்துக்கு 87 பேராக உள்ளது என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பலி எண்ணிக்கையைப் பொறுத்தவரை இந்தியாவில் லட்சம் பேரில் 0.49 பேர் இறக்கின்றனர் என்றும் உலகளவில் இது ஒரு லட்சம் பேருக்கு 5 பேராக உள்ளது என்றும் அமைச்சு மேலும் தெரிவித்தது.
இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட சில நாடுகளில் இறப்பு விகிதமானது ஒரு லட்சம் பேரில் 50க்கும் கூடுதலாக உள்ளது என சுகாதார அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா இடம்பெற்றுள்ளது. முன்னதாக ஐந்தாம் இடத்தில் ஸ்பெயின் இடம்பெற்றிருந்தது. இந்தியா ஸ்பெயினை முந்தியுள்ளது.

