புதுடெல்லி: கொரோனா கிருமித் தொற்று காரணமாக இந்தியாவில் அமலாக்கப்பட்ட 5 வது கட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இதன்படி உணவகங்களில் பொதுமக்கள் அமர்ந்து உணவு உண்ணவும், கடைத் தொகுதி மற்றும் வழிப்பாட்டு தலங்களை திறக்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக நீண்ட நாட் களுக்குப் பிறகு நேற்று சாலைகளில் போக்குவரத்து சரளமாகக் காணப்பட்டது.
மத்திய அரசின் வழிக்காட்டுதல்களின்படி சுமார் 80 விழுக்காடு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு உள்ளன. ஆனால் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், சிலைகளை தொடக் கூடாது, புனித நூல் களுக்கு அனுமதி கிடையாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஏறக்குறைய எண்பது நாட் களுக்குப் பிறகு மூடப்பட்டு இருந்த புகழ் பெற்ற திருநள்ளாறு சனீஸ் வர பகவான் கோயிலும் நேற்று திறக்கப்பட்டது. பொதுமக்கள் தரிசனம் செய்ய சமூக இடைவெளியுடன் தரையில் வட்டம் போட்டு காட்டப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு கிருமி நாசினி கொடுப்பது, உடல் வெப்பநிலை சோதனை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் அர்ச்சனைக்கு அனுமதியில்லை. தரிசனம் மட்டுமே செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக 'நலன்' குளத்தில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு குளத்தின் நீர் வெளியேற்றப்பட்டுஉள்ளது.
பத்து வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகளும் 60 வயதிற்கு மேல் உள்ள முதியவர்களும் கோவிலுக்கு வருவதை தவிர்க்கலாம் என்றும், வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநில பக்தர்கள் கோயில் வருவதற்கு தற்போதைக்கு அனுமதி கிடையாது என்றும் காரைக்கால் துணை ஆட்சியர் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார்.
எண்பது நாட்களுக்குப் பிறகு வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டதால் கோரக்நாத் கோவிலுக்குச் சென்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரார்த்தனை செய்தார்.
புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக மூடப்பட்டு இருந்த வழிபாட்டு தலங்களை திறக்க முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே ஆந்திர மாநில அரசின் உத்தரவு அடிப்படையில் நேற்று துவங்கி இரண்டு நாட்கள் பரிசோதனை அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கும் கோயிலை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
வரும் 10ஆம் தேதியிலிருந்து உள்ளூர் பக்தர்களுக்கு ஒவ்வொரு நாளும் 6,000 பேர் என்ற அடிப்படையில் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மறுநாள் 11ஆம் தேதியிலிருந்து வெளியூர் பக்தர்களும் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.
இதற்கான நுழைவுச் சீட்டு விற்பனையும் இணையம் வழியாக தொடங்கப்பட்டுள்ளது. திருப்பதியில் உள்ள முகப்புகளில் தினமும் இலவச தரிசனத்திற்கான 3,000 நுழைவுச் சீட்டுகள் வழங்கப்படும் என்றும் நிர்வாகம் அறிவித்துள்ளது.

