தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 15ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், 15ந்தேதி பத்தாம் வகுப்பு தேர்வை தொடங்க அனுமதிக்க முடியாது என்று கூறியதுடன் வருகிற 11ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.
கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருக்கும் இந்த சூழ்நிலையில், பொதுத்தேர்வை இப்போது நடத்தக்கூடாது என அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்றும், இன்றும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பின்போது பொதுத்தேர்வு குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்குதலை அடுத்து தமிழகத்தில் நடைபெற இருந்த பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி. நிலுலையில் உள்ள 11ஆம் வகுப்பு தேர்வும் ரத்து. எஞ்சியுள்ள 12ஆம் வகுப்பு தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
“காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் 80 சதவீதம் மற்றும் வருகைப்பதிவுக்கு 20 சதவீதம் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
“கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையில் மாணவர்கள் நலன் கருதி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது,” என்று கூறினார்.
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார்.
இதற்கிடையில் அண்டை மாநிலமான தெலுங்கானாவில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online