புதுடெல்லி: ஊரடங்குக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதையடுத்து, கடந்த சில நாட்களாக குறைந்தது 24 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொவிட்-19 கிருமி தொற்றும் விகிதம் அதிகரித்திருப்பதாக 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி கூறுகிறது.
தேசிய அளவிலான கிருமித்தொற்று அதிகரிப்பு விகித சராசரி 4.39 விழுக்காடாக இருக்கும் நிலையில், அந்த 24 மாநிலங்களில் அவ்விகிதம் 7 விழுக்காட்டிற்கும் மேலாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த வாரத்தில் இருமுறை கிருமித் தொற்று அதிகரிப்பு மிகப் பெரிய அளவில் பதிவானது. அதேபோல, கடந்த ஞாயிறன்று ஜம்மு-காஷ்மீரிலும் அரியானாவிலும் கிருமி பாதிப்பு உயர்வு அசாதாரண அளவில் இருந்ததாகக் கூறப்பட்டது.
ஒரு வாரத்திற்கு முன் இருந்ததைக் காட்டிலும், அசாம், திரிபுரா மாநிலங்களில் கிருமி தொற்றுவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 10% கூடி இருக்கிறது. கர்நாடகாவும் கிருமித்தொற்றுப் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் வந்துவிட்டது.
மேற்கு வங்காள, சத்தீஸ்கர், உத்தரகண்ட், கேரளா ஆகிய மாநிலங்களிலும் கொரோனா கிருமித்தொற்று அதிகளவில் பதிவாகி வருகிறது.

