கொவிட்-19 பிரச்சினைகளால் அனைத்துலக அளவில் விமானப் பயணங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ள வேளையில், துபாயிலிருந்து விரைவில் இந்தியாவின் கேரளாவுக்குத் திரும்ப விரும்பிய கர்ப்பிணி ஒருவர் இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடினார்.
அதிரா கீதா ஸ்ரீதரன் எனும் அந்த 27 வயது பெண்ணும் அவரது கணவர் நிதினும் கேரளா திரும்ப விரும்பி நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர்.
அதிராவுக்கு ஜூலை மாதத்தின் முதல் வாரத்திலேயே குழந்தை பிறந்துவிடும் என்று எதிர்பார்த்ததால், விரைவில் தாயகம் திரும்பி பெற்றோருடன் இருக்க விரும்பினர் அவர்கள்.
துபாயிலிருந்து மே மாதம் 7ஆம் தேதி கிளம்பிய முதல் ‘வந்தே பாரத் மிஷன்’ விமானத்தில் அதிரா மட்டும் கேரளாவுக்குத் திரும்ப அனுமதி கிடைத்தது. அவரும் தாயகம் திரும்பிவிட்டார்.
இதற்கிடையே, துபாய் அனைத்துலக நகரத்தில் உள்ள அவர்களது அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் நிதின் உயிரிழந்துவிட்டார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
நிதினுக்கு உயர் ரத்த அழுத்தம், இதயப் பிரச்சினைகள் இருந்ததாக அவரது நண்பர்கள் குறிப்பிட்டனர்.
இந்த சோகச் செய்தியால் அதிராவின் உடல் நலம் பாதிக்கக்கூடும் என அஞ்சி, நிதின் உடல் நலம் இல்லாமல் இருப்பதாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதின் இறந்துபோன செய்தி அதிராவுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளிக்கலாம் எனக் கருதிய அவரது குடும்பத்தார், குழந்தையை நல்லபடியாக பிரசவிக்கச் செய்வது பற்றி ஆலோசித்தனர்.
இந்நிலையில், அதிராவை மருத்துவமனையில் அனுமதித்த அவரது குடும்பத்தார், மகப்பேறு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.
அவருக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக இன்காஸ் இளையர் அணி எனும் சமூக அமைப்பைச் சேர்ந்த ஹர்ஷிக் என்பவர் கல்ஃப் நியூஸ் செய்தி இணையத் தளத்திடம் குறிப்பிட்டார்.
இந்நிலையில், நிதினுக்கு கொவிட்-19 தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 பரிசோதனையில் இது உறுதிப்படுத்தப்பட்டது என்று அவரது நண்பர் பிபின் ஜேக்கப் கூறினார்.
நிதினின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக திரு பிபின் கூறினார்.