இந்தியாவில் கொரோனா கிருமி வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும் பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது.
அதேசமயம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
மத்திய சுகாதாரத் துறை இன்று (ஜூன் 10) காலை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 276,583 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 9,985 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
279 பேர் மரணம் அடைந்தனர். இதன்மூலம் கொரோனா கிருமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,745 ஆக உயர்ந்துவிட்டது. உயிரிழப்பு விகிதம் 2.8 விழுக்காடாக உள்ளது.
இம்மாதம் 1 ஆம் தேதி ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கபட்டதில் இருந்து இந்தியாவில் தினமும் கொரோனா பாதிப்பு 9,000க்கும் அதிகமாக உள்ளது. கடந்த 9 நாட்களில் அந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது.
ஊரடங்கை தளர்த்துவது புதிய தொற்று அதிகரித்து இரண்டாம் அலை உருவெடுக்க வழிவகுக்கும் 15 அபாயகரமான நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது.
ஊரடங்கு தளர்வு கொரோனா பரவும் சூழ்நிலையை உருவாக்குவதாகவும் பரவல் தீவிரமடைந்து மீண்டும் கடுமையான தடைகளை திணிக்க இது வழிவகுக்கும் என்றும் 'நோமுரா' என்னும் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

