கொவிட்-19 தாக்கத்தால் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியும் பலர் தாயகம் திரும்ப வேண்டிய சூழலில் இருக்கின்றனர்.
இந்தியாவுக்குள்ளேயே, வெளி மாநிலங்களில் பணியாற்றிய பலரும் சொந்த மாநிலங்களுக்குத் திரும்புகின்றனர்.
அவ்வாறு தமிழகம் திரும்பியவர்கள் மீண்டும் பணியில் சேர்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் இணைந்து, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களது திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு குறுகிய கால திறன் பயிற்சிகளை அளித்து வரும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தனியார் துறை நிறுவனங்களில் பணிநியமனம் பெற்று வழங்கும் சேவையையும் மேற்கொண்டு வருகிறது.
“வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து தமிழர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். அவர்களது வேலைத்திறன் மற்றும் முன் அனுபவங்களைக் கண்டறிந்து தகுதிக்கேற்ப தனியார் துறைகளில் பணிவாய்ப்பினை பெற உதவுவதற்கும், திறன் பயிற்சி தேவைப்படும் துறைகளில் அவர்களுக்கு உரிய திறன் பயிற்சி வழங்கி தனியார் துறை நிறுவனங்களில் பணிவாய்ப்பினை பெற உதவுவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் குறிப்பிட்டது.
அவ்வாறு திறன் மேம்பாட்டுச் சேவை வேண்டுவோர், https://www.tnskill.tn.gov.in என்ற இணையப்பக்கத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.