துப்பாக்கிகளுடன் கொள்ளையடிக்க வந்தவர்களிடமிருந்து தனது உயிரைக் காப்பாற்றிய இரண்டு யானைகளின் பெயரில் தனது சொத்தில் பாதியை எழுதி வைத்திருக்கிறார் பீகாரைச் சேர்ந்த அக்தர் இமாம்.
ஆசிய யானைகள் மறுவாழ்வு மையம் மற்றும் வன விலங்கு அறநிறுவனத்தின் (AERAWAT) தலைமை மேலாளரான திரு அக்தர், தமது 12ஆம் வயதிலிருந்து யானைகளைப் பராமரித்து வருவதாகச் சொன்னார்.
“ஒரு சமயம், நான் தூங்கிக்கொண்டிருந்தபோது, துப்பாக்கிகளுடன் எனது வீட்டுக்குள் கொள்ளையர்கள் நுழைந்தனர். அதனைப் பார்த்த இரண்டு யானைகள் தொடர்ந்து பிளிறத் தொடங்கின.
“விழித்துக்கொண்ட நான், உதவிக்கு ஆட்களை அழைத்தேன். கொள்ளையர்கள் தப்பியோடிவிட்டனர்,” என்றார் திரு அக்தர்.
மோதி, ராணி என்று அழைக்கப்படும் அந்த யானைகள் தமது குடும்ப உறுப்பினர்கள் போன்றவர்கள் என்று கூறும் திரு அக்தர், அவற்றுடன் மிகுந்த பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.
அந்த இரு யானைகளின் பெயரில் அவர் எழுதி வைத்துள்ள நிலத்தின் மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆனால், யானைகளின் பெயரில் சொத்துகளை எழுதி வைத்ததால் தமது குடும்பத்தாரிடமிருந்து மிரட்டல்கள் வருவதாகக் குறிப்பிட்டார் அக்தர். குடும்பப் பிரச்சினை காரணமாக அக்தரின் மனைவியும் மகன்களும், கடந்த 10 ஆண்டுகளாக அவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
தம் மகன் மீரஜ் இந்த இரு யானைகளையும் கடத்தல்காரர்களிடம் விற்க ஏற்பாடு செய்ததாகவும் அது அதிர்ஷ்டவசமாக முறியடிக்கப்பட்டதாகவும் கூறுகிறார் திரு அக்தர்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online