மும்பையின் தாராவியில் கிருமித்தொற்று கட்டுக்குள் வந்தது

2 mins read
1fa69d6c-1c77-4fe3-b820-1c06185d00ad
தாராவி குடிசைப் பகுதியில் வீடு வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொள்ளும் மருத்துவக் குழு. அப்பகுதி மக்கள் நகராட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். படம்: ஊடகம் -

மும்பை: ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு மாவட்ட நிர்வாகம் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்ககளைச் சிறப்பாக மேற்கொண்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டி உள்ளனர்.

மும்பையில் உள்ள தாராவியில் சுமார் 10 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். அங்கு கிருமித்தொற்று பரவினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க நேரிடும் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர். ஏனெனில் தாராவியில் 100 சதுர அடி கொண்ட சிறிய குடிசையில் குறைந்தபட்சம் 7 பேர் தங்கி உள்ளனர். எனவே அங்கு சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது அறவே சாத்தியமற்றது என்கிறார் மும்பை நகராட்சியின் உதவி ஆணையர் திஹாவ்கர்.

"எனவே, பாதிக்கப்பட்டவர்கள் எங்களை அணுகும்வரை காத்திருப்பது சரியல்ல என்று முடிவெடுத்தோம். மாறாக, கொரோனா கிருமித் தொற்றை நாமே தேடிச் செல்வது என்று தீர்மானித்து தாராவியில் உள்ள ஒவ்வொரு குடிசையையும் சிறிய வீடுகளின் கதவுகளையும் தட்டினோம்.

"கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி இதுவரை 47,500 வீடுகளுக்குச் சென்று சுமார் 7 லட்சம் பேருக்கு கொவிட்-19 நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளைச் செய்துள்ளோம். இதன்மூலம் நோய் கண்டவர்களைத் தொடக்க நிலையிலேயே அடையாளம் கண்டு சிகிச்சை அளிக்க முடிந்தது. இதனால்தான் தாராவியில் உயிரிழப்பு வெகுவாகக் குறைந்தது.

"பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடாது என்பதைவிட உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகமாகிவிடக்கூடாது என்பதே எங்களது நோக்கம்," என்கிறார் திஹாவ்கர்.

தாராவியில் மிகச்சிறிய குடிசைகளில் லட்சக்கணக்கானோர் தங்கியுள்ளனர். அங்கு 80 பேருக்கு ஒரு கழிவறை மட்டுமே உள்ளது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டே மும்பை மாநகராட்சி இப்பகுதியில் நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன்பலனாக பாதிக்கப்பட்டவர்களில் சரிபாதிக்கும் மேலானவர்கள் குணமடைந்துள்ளனர். மே மாதத் துவக்கத்தில் தினமும் 60 புது நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது அன்றாட பாதிப்புகளின் எண்ணிக்கை 20ஆக குறைந்துள்ளது.