போபால்: மத்திய பிரதேசத்தில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,000ஐ கடந்துள்ளது. கிருமிப் பரவலை தடுக்க மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்தப் பிரச்சினையை முன்வைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜித்து பத்வாரி, விஷால் பட்டேல், சஞ்ஜய் சுக்லா ஆகியோர் இந்தூரில் கடந்த சனிக்கிழமை போராட்டம் நடத்தினர்.
சம்பவ இடத்திற்கு இந்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் திவாரியும் மாவட்ட துணை ஆட்சியர் ராகேஷ் ஷர்மாவும் விரைந்தனர். அங்கு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களைக் கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர்.
மேலும் எம்எல்ஏக்களுக்கு அருகில் சென்ற இரு அதிகாரிகளும் மண்டியிட்டு கைக்கூப்பி போராட்டத்தை விலக்கிக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இச்சம்பவத்தைக் காட்டும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இந்நிலையில் எம்எல்ஏக்கள் முன் மண்டியிட்ட இரண்டு அதிகாரிகளையும் தலைநகர் போபாலுக்கு பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

