தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அலுவலக தனிச்செயலாளர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழக முதல்வரின் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கடுமையான காய்ச்சல் மற்றும் சளி தொல்லை காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா தொற்று உறுதியான தாமோதரன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (ஜூன் 17) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தனிச்செயலாளருடன் இருந்தவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அவரது குடும்ப உறுப்பினருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், நேற்றைய நிலவரப்படி 1,515 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,019 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் மொத்தம் 34,245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அளவில், கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் இதுவரை 528 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 26,782 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும், கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது.
வரும் 19ஆம் தேதி முதல் சென்னையில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online