டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர குமார் ஜெயின் காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்காக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நேற்று முன்தினம் (ஜூன் 16) அனுமதிக்கப்பட்டார்.
காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற கொவிட்-19 அறிகுறிகள் இருந்ததால் 55 வயதான அவருக்கு உடனடியாக கொரோனா கிருமித்தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது.
முதல் நாளில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கிருமித்தொற்று இல்லை என்ற முடிவு பெறப்பட்டது. ஆனால், நேற்று மீண்டும் நடத்தப்பட்ட சோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கும் கிருமித்தொற்று பரிசோதனை செய்யப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் திரு சத்யேந்திர குமார் ஜெயின் வகித்து வந்த சுகாதாரத்துறை பொறுப்பு, துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
திரு சத்யேந்திர குமார் ஜெயினுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பிற துறைகளும், துணை முதல்வரிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டிருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online