புதுடெல்லி: இந்திய-சீன எல்லையில் பதற்றத்தைக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்று இரு நாடுகளுமே கருத்து தெரிவித்து வருகின்றன.
இருந்தாலும் கோபமூட்டும் செயல்களில் சீனா ஈடுபட்டால் கடுமையான விளைவுகளை அந்த நாடு சந்திக்க வேண்டி இருக்கும் என்று இந்தியா எச்சரித்துள்ளது.
லடாக் எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையில் பதற்றம் கூடியதை அடுத்து பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தன.
ஆனால் அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையில் திங்கட்கிழமை திடீரென மோதல் ஏற்பட்டதில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்தனர்.
இந்நிலையில், கொவிட்-19 ஒழிப்பு முயற்சியாக மாநில முதல்வர்களுடன் பேசிய பிரதமர் மோடி, இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்றாலும் யாராவது சீண்டி னால் தக்க பதிலடி கிடைக்கும் என்று கூறினார்.
இதனிடையே, இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் நேற்றும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இவ்வேளையில், இந்தியாவில் சீனத் தயாரிப்புப் பொருட்களைத் தவிர்த்துக் கொள்வதற்கான முயற்சியாக, சீனாவிலிருந்து வரும் 500 வகையான பொருட்களைப் புறக்கணிக்கப் போவதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (கெய்ட்) தெரிவித்தது.
சீனத் தயாரிப்புப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று 4ஜி வசதிகளை மேம்படுத்தி வரும் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இந்திய தொலைத்தொடர்புத் துறை தெரிவித்து இருக்கிறது. இதேபோல் ரயில்வே துறையிலும் முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இவ்வேளையில், கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் தங்களுக்குப் பாத்தியதை இருக்கிறது என்று கூறும் சீனாவின் பேச்சு மிகைப்படுத்தப்பட்டது என்றும் அது ஏற்றுக்கொள்ள முடியாத கூற்று என்றும் மத்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துவிட்டது.
இச்சூழலில், இந்திய அரசின் இணையத்தளங்கள், ஏடிஎம் வங்கி அமைப்புகளைக் குறிவைத்து சீனா விலிருந்து இணையத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரித்தது.

