ராமநாதபுரம்: எல்லைப் பகுதியில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக ராணுவ விமானம் மூலம் மதுரை வந்தடைந்த பழனியின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் வினய் மலரஞ்சலி செலுத்தினார்.
வீரமரணம் அடைந்த வீரர் பழனி ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது உடலுக்கு உறவினர்களும் அப்பகுதி மக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நேரில் சென்று பழனியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்ட பழனியின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பழனியின் சகோதரர் இதயக்கனியும் ராணுவத்தில்தான் பணியாற்றுகிறார். எல்லைப் பகுதியில் உள்ள இந்திய வீரர்களை தாம் தொடர்புகொண்டு பேசியதாகவும், அப்போது எல்லையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த 150 இந்திய வீரர்கள் மீது சீன ராணுவத்தைச் சேர்ந்த ஆயிரம் பேர் திடீரென கற்கள் மற்றும் கம்பிகள் கொண்டு தாக்குதல் நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர் என்றும் இதயக்கனி செய்தியாளர்களிடம் கூறினார்.
பழனியின் மறைவால் கடுக்கலூர் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.