புதுடெல்லி: நாடு முழுவதும் 116 மாவட்டங்களுக்கு அதிக அளவில் புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பி இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊர் திரும்பிய தொழிலாளர்களுக்கு ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணி வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
தொழிலாளர்களின் திறன்களை கண்டு அறிந்து 25 வகையான பணிகளை வழங்க திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
"இந்தத் திட்டத்தை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைப்பார். அடுத்த நான்கு மாதங்களில் தொழிலாளர்களின் திறனைக் கண்டறிந்து, அவர்களது மாவட்டங்களிலேயே பல்வேறு தொழில்கள் தொடங்கப்படும். கிணறு தோண்டுதல், பண்ணை கட்டுமானம், சாலை அமைத்தல், பஞ்சாயத்துகளில் கட்டடம் கட்டும் வேலைகள் வழங்கப்படும்," என்றும் நிர்மலா சீதாராமன் மேலும் தெரிவித்தார்.

