புதுடெல்லி: இந்தியாவில் நுகர்வும் தேவையும் கொரோனா பாதிப்புக்கு முன்பு இருந்த நிலையை நோக்கி வேகமாக முன்னேறி வருவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதிய தொடக்கத்துக்கு இதை விட சிறந்த நேரம் இருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் உள்ள 41 நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், தற்போதுள்ள சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும் போது, இந்திய பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெறத் தயாராக இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்றார்.
"பல ஆண்டுகளாக கட்டுப்பாட்டில் இருந்த நிலக்கரித் துறையை அதில் இருந்து வெளியே கொண்டு வந்து இருக்கிறோம். இந்தச் சீர்திருத்த நடவடிக்கையின் மூலம் நிலக்கரி உற்பத்தியும் நிலக்கரி துறையும் தன்னிறைவைப் பெறும்," என்றார் பிரதமர் மோடி.
இயற்கை வளங்களும் சுரங்கத் தொழிலும் இந்தியப் பொருளாதாரத்தின் முக்கியமான தூண்கள் என்று குறிப்பிட்ட அவர், உலகில் நிலக்கரி வளத்தில் இந்தியா 4ஆவது இடத்திலும், உற்பத்தியில் 2ஆவது இடத்திலும் இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
"ஆனால் நாம் நிலக்கரியை ஏற்றுமதி செய்யவில்லை. உலகிலேயே நிலக்கரியை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளது.
"அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் நிலக்கரி சுரங்கத் தொழிலில் ரூ.33 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலக்கரிச் சுரங்கங்கள் மூலம் மாநில அரசுகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும்," என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

