புதுடெல்லி: சீனத் தயாரிப்புப் பொருட்களைப் புறக்கணிப்பதற்கு முன்பு மத்திய அரசு உரிய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியது அவசியம் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது, சீனப் பொருட்களுக்கு கிடைக்கும் சந்தை வாய்ப்பைப் பறித்து உள்நாட்டு உற்பத்திப் பொருட்களுக்கு வழங்குவது ஆகியவையே தமது தலைமையில் இருந்த முந்தைய அரசின் நோக்கமாக இருந்தது என அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனப் பொருட்களைப் புறக்கணிப்பது அவ்வளவு எளிதானது அல்ல என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
"ஆனால், நான் அறிவித்த திட்டத்தை அமல்படுத்த இன்றைய பாஜக அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா என்பது எனக்குத் தெரியாது. நமது எல்லையில் சீனா தாக்குதல் நடத்திய பிறகுதான் சிலருக்கு சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் எனும் திடீர் ஞானோதயம் வந்துள்ளது," என்று குமாரசாமி கூறியுள்ளார்.

