புதுடெல்லி: இந்திய-சீன ராணுவத்தினர் எல்லைப் பகுதியில் மோதிக்கொண்டதை அடுத்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் நிலைமை எல்லை மீறிப் போகும்போது இந்திய வீரர்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் எல்லைப் பகுதியில் மோதிக்கொண்டபோது இருதரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. மேலும், சீன வீரர்கள் ஆணிகள் குத்தப்பட்டிருந்த விறகுக் கட்டைகளைக் கொண்டு இந்திய வீரர்களைத் தாக்கியதாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து இந்திய வீரர்கள் ஏன் உரிய ஆயுதங்களின்றி எல்லைப் பகுதிக்குச் சென்றனர் என்றும் சில தரப்பினர் கேள்வி எழுப்பினர்.
எனினும் கடந்த 1996ஆம் ஆண்டு இந்தியாவும் சீனாவும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி இருதரப்பினரும் எல்லையில் சுற்றுக் காவல் படையில் ஈடுபடும்போது ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது என்பது விதிமுறை.
இந்நிலையில் சீன ராணுவம் இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி ஊடுருவ முயற்சித்துள்ளது. எனவே, இந்திய வீரர்களின் பாதுகாப்பு கருதி இனி எல்லையில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபடும்போது ஆயுதங்கள் வைத்திருக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்துள்ளது.
மேலும் நிலைமை தீவிரமடையும் பட்சத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தவும் வேறு வகையான ஆயுதங்களைப் பயன்படுத்தவும் இந்த அனுமதி வழிவகுக்கிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நாட்டின் முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகளுடன் எல்லை விவகாரம் குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தங்கள் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் சீன வீரர்களின் ஊடுருவலைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இந்திய ராணுவத்திற்கு போதுமான ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்கள் இருக்கிறதா என்பதையும் அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி செய்துகொண்டார் என்றும் தற்போது ரஷ்யா சென்றுள்ள அவர் அந்நாட்டிடமிருந்து சில பாதுகாப்பு தளவாடங்களை வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே லடாக் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்திய வீரர்கள் சிலர் உயிரிழந்திருப்பது போன்று இருமடங்கு வீரர்களை சீனா இழந்திருப்பதாக மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய வீரர்களை சீன ராணுவம் விடுவித்தது போன்று எல்லை மீறி ஊடுருவிய சீன வீரர்களை இந்தியாவும் திரும்ப ஒப்படைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.