ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் 10 நாள் திருவிழாவின் முக்கிய அங்கமான ரத யத்திரை இன்று தொடங்கியது.
இந்தத் திருவிழாவில் 500 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் பழமையான இந்தத் திருவிழாவின்போது ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் மக்கள் திரள்வர்.
இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக ரத யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடும் கட்டுப்பாடுகளுடன் இன்று ரத யாத்திரை தொடங்கியது.
16 சக்கரங்களைக் கொண்ட 44 அடி உயரத்திலான தேரில் உற்சவ மூர்த்தியும், 14 சக்கரங்களைக் கொண்ட தேரில் பாலபத்திரரும், 12 சக்கரங்களுடன் அமைந்துள்ள தேரில் சுபத்ராவும் எழுந்தருளிய பின்னர் பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுப்பர். இந்த மூன்று தேர்களும் ஆண்டு தோறும் வேப்ப மரக் கட்டைகளால் செய்யப்படுகின்றன.
மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குண்டிச்சா கோயிலை சென்றடைந்ததும் ஜெகன்நாதர் ஓய்வெடுப்பார். திருவிழாவின் 4 நாளில் தனது கணவரை காண லட்சுமி தேவி குண்டிச்சா கோயிலுக்கு வருகை தர உள்ளார். அதைத் தொடர்ந்து மீண்டும் தேர்கள் புறப்ப்பட்டு பூரி ஜெகன்நாதர் கோயிலை வந்தடைந்ததும் விழா நிறைவடைய உள்ளது.
தேரோட்டத்தையொட்டி மூன்று தேர்களும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தை சுற்றி நேற்றிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பூரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டத்தை வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சியில் நேரலையில் காண மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.
கோவில் பணியாளர்கள், கலந்துகொண்டுள்ள பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் உள்ள போலிசார் என தொடர்புடைய அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online