வெளிநாடுகளில் வசித்து வந்த ஈராயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் நேற்று ஒரே நாளில் 12 விமானங்கள் மூலமாக கொச்சி அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கினர்.
அதற்கு முதல் நாளில், எட்டு விமானங்கள் மூலமாக 1,700க்கும் மேற்பட்டோர் அந்த விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.
இந்தியாவில் அனைத்துலக விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆயினும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு ஏதுவாக கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் ‘வந்தே பாரத்’ எனும் திட்டத்தின் மூலம் இந்திய அரசாங்கம் சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது.
அந்தத் திட்டத்தின் மூன்றாம் கட்டமாக, 432 விமானச் சேவைகள் மூலம் 42 நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும் பணி இடம்பெற்று வருகிறது.
‘வந்தே பாரத்’ மூலமாக இதுவரை இருநூறாயிரம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
கட்டுப்பாடு விதித்த அமெரிக்காஇதற்கிடையே, இரு நாடுகளுக்கு இடையிலான விமானப் போக்குவரத்து உடன்படிக்கையை மீறி, ‘நியாயமற்ற, பாகுபாடான நடைமுறைகளில்’ ஈடுபடுவதாகக் கூறி, ஏர் இந்தியா விமானங்கள் வர அமெரிக்கா சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அமெரிக்க விமானங்கள் இந்தியா செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், தன் நாட்டு மக்களைத் திரும்ப அழைத்துச் செல்வதாகக் கூறி ஏர் இந்தியா மட்டும் சிறப்பு விமானங்களை இயக்கி வருவதாகவும் பயணக் கட்டணம் வசூலிப்பதாகவும் அமெரிக்கப் போக்குவரத்துத் துறை குற்றம் சாட்டி வருகிறது.
இதையடுத்து, சிறப்பு விமானங்களை இயக்க இந்தியா இனி அமெரிக்கப் போக்குவரத்துத் துறையிடம் முன்அனுமதி பெற வேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடு அடுத்த 30 நாட்களுக்கு நீடிக்கும்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online