புதுடெல்லி: அரசாங்கம் நடத்தி வரும் கொவிட்-19 மருத்துவமனைகளுக்கு 50,000 செயற்கை சுவாசக் கருவிகளை (வென்டிலேட்டர்) வாங்க 'பிஎம்-கேர்ஸ்' எனும் நிதியில் இருந்து ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்தச் செயற்கை சுவாசக் கருவிகள் அனைத்தும் இந்தியத் தயாரிப்புகளாக இருக்கும்.
இதுவரை 2,923 செயற்கை சுவாசக் கருவிகள் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் அவற்றில் 1,340 சுவாசக் கருவிகள் ஏற்கெனவே மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாகவும் பிரதமர் அலுவலகம் நேற்று தெரிவித்தது. இம்மாத இறுதிக்குள் மேலும் 14,000 சுவாசக் கருவிகள் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படும்.
'பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்' நிறுவனம் மட்டும் 30,000 சுவாசக் கருவிகளைத் தயாரித்து வருகிறது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நல்வாழ்விற்காகவும் 'பிஎம்-கேர்ஸ்' நிதியில் இருந்து 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் 312 பேர் உயிரிழப்பு
இதனிடையே, கொரோனா கிருமித்தொற்று காரணமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் 312 பேர் மரணமடைந்தனர். இதையடுத்து, கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,011ஆக உயர்ந்தது.
நேற்று முன்தினம் மட்டும் புதிதாக 14,933 பேரை கொரோனா தொற்ற, ஒட்டுமொத்த பாதிப்பு 440,215ஆக அதிகரித்தது. அவர்களில் 248,190 பேர் தொற்றில் இருந்து மீண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆந்திராவில் அனைவருக்கும் சோதனை
விஜயவாடா: ஆந்திராவில் உள்ள எல்லா குடும்பங்களும் அடுத்த 90 நாட்களுக்குள் கொவிட்-19 கிருமித்தொற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொடர்பான மறுஆய்வுக் கூட்டத்தின்போது, கிருமித்தொற்றுப் பரிசோதனையை முடுக்கிவிடும்படி மருத்துவ, சுகாதாரத் துறை அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார். மக்கள் தாங்களாகவே முன்வந்து அருகிலிருக்கும் சுகாதார நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக பெரிய அளவில் விழிப்புணர்வுப் பிரசாரம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

