இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் வசிக்கும் சுமார் 120 மில்லியன் சிறுவர்கள், கொவிட்-19 ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக, அடுத்த ஆறு மாதங்களுக்குள் வறுமையின் பிடியில் சிக்கும் சாத்தியம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெஃப் அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறாது.
இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேப்பாளம், பங்ளாதேஷ், மாலத் தீவுகள், இலங்கை ஆகிய எட்டு நாடுகளை உள்ளடக்கிய தெற்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் 600 மில்லியன் சிறுவர்களின் எதிர்காலம் கொவிட்-19 பிரச்சினைகளால் எவ்வாறு கேள்விக்குறியாகிறது என்பதையும் அறிக்கை குறிப்பிடுகிறது.
சுகாதாரமின்மை, கல்வியைத் தொடர முடியாத சூழல், துப்புரவின்மை, தரம் குறைந்த பணி போன்ற பல பரிமாணங்களில் சுமார் 240 மில்லியன் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதையும் அது சுட்டிக் காட்டியது.
அது தவிர, 120 மில்லியன் மக்கள் கொவிட்-19 நெருக்கடியால் வறுமைக்குள் தள்ளப்படுவர் என்றது அது.
நோய்த் தடுப்பு, சத்துணவு, முக்கிய சுகாதாரச் சேவைகள் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 தொடர்பான சிக்கல்களையும் அதன் எதிர்மறைத் தாக்கத்தையும் அறிக்கை சுட்டியது.
அடுத்த ஓராண்டுக்குள் 5 வயதுக்குட்பட்ட 881,000 சிறுவர்களும் 36,000 தாய்மார்களும் தெற்காசியாவில் உயிரிழக்கக்கூடும் என்று ஜான் ஹாப்கின்சன்ஸ் பொதுச் சுகாதாரப் பள்ளி மேற்கொண்ட ஆய்வைக் குறிப்பிட்டு, தகவலை வெளியிட்டது யுனிசெஃபின் அறிக்கை. பெரும்பாலான அத்தகைய உயிரிழப்புகள் பாகிஸ்தானில் அதிகம் இருக்கும் என்றாலும் ஆப்கானிஸ்தானிலும் பங்ளாதேஷிலும் உயிரிழப்புகள் இருக்கக்கூடும் என்று அறிக்கை குறிப்பிட்டது.
இந்தியாவில் குழந்தைகள் கொவிட்-19 நெருக்கடிகளிலிருந்து மீள, குழந்தைகளுக்கான அத்தியாவசியச் சேவைகளின் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று யுனிசெஃபுக்கான இந்தியப் பிரதிநிதி யாஸ்மின் ஹேக் கூறினார்.
கொவிட்-19 நெருக்கடிகளால் 247 மில்லியன் தொடக்கப் பள்ளி மாணவர்களும் 28 மில்லியன் உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் பள்ளிக்குச் செல்லவில்லை என்று கூறிய திருவாட்டி ஹேக், பள்ளிகள் விரைவில் திறக்கப்பட வேண்டும் என்றார். இந்த நெருக்கடிக்கு முன்பாகவே 6 மில்லியன் சிறுவர்கள் படிப்பைக் கைவிட்டதையும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online