புதுடெல்லி: உலகளவில் கொவிட்-19 இறப்பு விகிதமானது இந்தியாவில்தான் மிகக் குறைவு என்று மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் லட்சம் பேருக்கு ஒருவர் மட்டுமே உயிரிழக்கிறார். உலகளவில் லட்சத்துக்கு 6 பேர் இறக்கின்றனர்.
இந்தியாவைவிட உலகளவில் இறப்பு விகிதம் 6 மடங்கு அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள மத்திய சுகாதார அமைச்சு, மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளே இறப்பு விகிதம் குறைவாக இருக்கக் காரணம் எனத் தெரிவித்துள்ளது.
மேலும் கொவிட் 19 நோயிலிருந்து குணமடைபவர்களின் விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ள அந்த அமைச்சு, குணமடையும் விகிதம் தற்போது 56.38 விழுக்காடாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 2,48,189 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். சுமார் 1.78 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
"நோய்த்தொற்றுப் பரவலைத் தடுத்தல், தனிமைப்படுத்துதல், மேலாண்மை செய்தல் ஆகியவற்றை மாநில அரசுகளோடு சேர்ந்து மத்திய அரசும் மேற்கொண்டுள்ளது.
"இத்தகைய சீரான நடைமுறை, முன்கூட்டியே செயல்படும் முறை, தாமே முன்வந்து செயல்படும் அணுகுமுறை ஆகியவையே இறப்புகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கக் காரணம் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

