புதுடெல்லி: அண்மைய சில தினங்களாக டெல்லியில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்கு கொவிட்-19 நோயாளிகளுக்கு என 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட பராமரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இது சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் சதுர மீட்டரில் பிரம்மாண்டமான பராமரிப்பு நிலையமாக இருக்கும்.
முதற்கட்டமாக நாளை முதல் 2 ஆயிரம் படுக்கைகளுடன் இந்த நிலையம் செயல்படத் துவங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“இந்த நிலையத்தில் அதிகபட்சமாக 10,200 படுக்கைகள் வரை இடம்பெற முடியும். இதுதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய கொவிட்-19 பராமரிப்பு நிலையமாக இருக்கும்.
“ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இங்கு பணியமர்த்தப்படுவர். மேலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ உதவியாளர்கள், நிபுணர்கள், பாதுகாவலர்கள் பணியில் இருப்பர்,” என்று டெல்லி அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையத்தின் பாதுகாப்புப் பணியை இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை நேற்றுமுதல் மேற்கொண்டுள்ளது.
டெல்லியில் கிருமித் தொற்றுப் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் நேற்று முன்தினம் ஒரே நாளில் அங்கு புதிதாக 4 ஆயிரம் பேருக்குக் கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 66 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
டெல்லியில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொவிட் 19 நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் போதுமான அளவு படுக்கைகள் இல்லை எனும் புகார் அவ்வப்போது எழுந்து வருகிறது.
இதற்குத் தீர்வாக கொவிட்-19 நோயாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் இந்தப் பராமரிப்பு நிலையம் அமைந்துள்ளது.
டெல்லியில் சில சமூக அமைப்புகள் குறைந்த செலவில் வீடுகள், வாகனங்களில் கிருமி நாசினி அடிக்கும் பணியை மேற்கொண்டுள்ளன. அங்கு வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்யத் துவங்கியுள்ளது மாநில அரசு. படம்: