இந்தியாவில் கொரோனா கிருமி அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதுவரை இல்லாத அளவில் 24 மணி நேரத்தில் 17,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை நேற்று தெரிவித்தது.
இதன்மூலம் அங்கு கிருமி தொற்றியவர்களின் எண்ணிக்கை 490,401 ஆகியுள்ளது. ஆகக் கடைசியாக உயிரிழந்த 407 பேரையும் சேர்த்து மரண எண்ணிக்கை 15,301ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த உயிரிழப்பு விகிதம் 3.1% ஆக உள்ளது எனவும் சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும் கிருமி சோதனை தீவிரப்படுத்தப்பட்டி ருப்பதாலும் கிருமித்தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது.
அதேநேரத்தில், தீவிர மருத்துவக் கவனிப்பு, வழிகாட்டுதல்கள் காரணமாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
நாடு முழுவதும் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் 730 அரசு ஆய்வகங்களும், 270 தனியார் ஆய்வகங்களும் அடங்கும். இதுவரை 285,637 பேர் குணமடைந்துள்ளனர். ஒரேநாளில் 13,940 பேர் குணமடைந்தனர். குணமடையும் விகிதம் 58.2% ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 189,463 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள மகாராஷ்டிராவில் இதுவரை 147,741 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 77,453 பேர் (52.4%) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
39,999 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள டெல்லியில் 44,765 பேர் (60.60%) குணமடைந்துள்ளனர்.
மூன்றாவது நிலையில் இருக்கும் தமிழகத்தில் 70,977 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 39,999 (56.3%) பேர் குணமடைந்துள்ளனர்.
கொவிட்-19 கிருமிக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை பாதுகாப்பு இடைவெளி, முகக்கவசம், தனிப்பட்ட சுகாதாரத்தை பேணுதல் ஆகியவை அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ளூர் தொழில்முனைவர்களை ஊக்குவிக்கவும் மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கவும் உருவாக்கப்பட்ட 'ஆத்ம நிர்பார் உத்தரப் பிரதேஷ் ரோஜ்கர் அபியான்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்து பேசிய மோடி, கொரோனாவைக் கட்டுப்
படுத்த உத்தரப் பிரதேச அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளைப் பாராட்டினார்.
கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பயணிகள், விரைவு புறநகர் ரயில் சேவைகள் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நோய்த் தொற்றைத் தடுக்க மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளில் நாட்டின் பொருளியலும் பெருமளவில் பாதிப்படைந்துள்ளது. மக்களுக்கிடையேயான வருமான இடைவெளியும் மிகவும் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பணவீக்கம் அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை, எண்ணெய் விலையேற்றம் போன்ற உள்ளூர்ப் பிரச்சினை
களுக்கிடையே சீனாவுடனான எல்லைப் பிரச்சினை போன்ற சிக்கல்களையும் உடனடியாகச் சமாளித்தாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
தமிழகத்தில் கிருமிப் பரவல் கட்டுக்குள் இருப்பதாக முதல்வர் தகவல்
தமிழகத்திலும் கிருமித்தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவாக வியாழக்கிழமை ஒரே நாளில் 3,509 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 70,977ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஒரே நாளில் தொற்று எண்ணிக்கை முதன்முறையாக 3,000ஐ தாண்டியதுடன் பல மாவட்டங்களில் கிருமிப் பரவல் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் கிருதி தொற்றியோர் எண்ணிக்கை 47,650 ஆகியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கொவிட்-19 கட்டுக்குள் இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம், மத்திய சுகாதாரத் துறை, ஐசிஎம்ஆர் போன்ற அமைப்புகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றியதால் இறப்பு விகிதம் குறைவாக உள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
"வல்லரசு நாடுகளில்கூட கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்க முடியாத சூழலில் தமிழகத்தில் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு பரவலை கட்டுக்குள் வைத்திருக்கிறோம்," என அவர் கூறினார்.
தமிழகம் முழுவதும் தற்போது நடப்பில் உள்ள 5ஆம் கட்ட பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து வரும் திங்கட்கிழமை மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

