புதுடெல்லி: வடமாநிலங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பீகாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
பீகாரில் கடந்த 3 தினங்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மழை தொடர்பான பல்வேறு சம்பவங்களில் இதுவரை 83 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். பெரிய அளவில் சொத்துகள் சேதமடைந்துள்ளதாக அம்மாநிலத்தின் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
பீகாரில் உள்ள 23 மாவட்டங்களில் இடி மின்னல் தாக்கி பலியானோரின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. அங்குள்ள கோபால் கஞ்சில் பகுதியில் மட்டும் அதிகபட்சமாக 13 பேர் மின்னல் தாக்கி பலியாகி உள்ளனர்.
இதற்கிடையே உத்தரப்பிரதேசத்தில் கனமழைக்கு இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இடி மின்னல் தாக்கியதில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பீகாரில் பலியானோர் குடும்பங்களுக்கு மாநில அரசு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அளித்துள்ளது.
இதற்கிடையே ராஜஸ்தான், இமாச்சலப்பிரதேசம், ஹரியானா, அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் வடமாநிலங்களில் மேலும் இரு தினங்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

