புதுடெல்லி: இந்தியாவின் மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மாநிலங்களில் கொரோனா கிருமித்தொற்று இருந்தாலும் இதுவரை உயிரிழப்பு இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,715 பேர் குணம் அடைந்துள்ளதாகவும் 3,731 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் கொரோனா கிருமி பாதிப்பு தீவிரமாக இருந்தபோதும், எட்டு வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகளவில் இல்லை.
ஒட்டுமொத்த வட கிழக்குப் பகுதியில் கொரோனா தொற்றுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை வெறும் 12 தான். மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களும் கொரோனா கிருமி உயிரிழப்புகளில் இருந்து இதுவரை தப்பி உள்ளன. இது ஒரு வியப்பாகத் தெரிகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா தொற்று சிகிச்சைக்கென்று பிரத்தியேக மருத்துவமனை கள் எதுவும் இல்லை.

