புதுடெல்லி: திங்கட்கிழமை ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்தியாவில் கொரோனா கிருமித் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 16,893 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் திங்கட்கிழமை ஒரே நாளில் புதிதாக 18,522 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,66,840 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளையில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான நிலவரப்படி 13,099 பேர் கொவிட் 19 நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,34,821ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொவிட் 19 நோயால் தாக்கப்பட்டவர்களில் இதுவரை 59 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர் என்றும் தற்போது சுமார் 2.15 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அதிகமானோர் கூடும் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் ஊரடங்கு சற்றே தளர்த்தப்பட்டிருந்தாலும் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க தடை நீடிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுக்கூடங்கள், அரங்குகள் ஆகியவையும் ஜூலை 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்.
நேற்று காலை நிலவரப்படி அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் தற்போது சீனாவை முந்தி உள்ளது தலைநகர் டெல்லி.
மகாராஷ்டிராவில் சுமார் 1.7 லட்சம் பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சுமார் 4,800 போலிசாருக்கு கொவிட்-19 நோய் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
டெல்லியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் அங்கு கடந்த மாதம் 18ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை சுமார் 99 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 7,414 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கிடையே உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
குஜராத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 32 ஆயிரமாக உள்ள நிலையில் உத்தரப்பிரதேசத்தில் இந்த எண்ணிக்கை 23 ஆயிரமாகவும், ராஜஸ்தானில் சுமார் 18 ஆயிரமாகவும் உள்ளது.
மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரமாகவும் ஹரியானாவில் 14 ஆயிரமாகவும் மத்தியப்பிரதேசத்தில் 13 ஆயிரமாகவும் உள்ளது.
கொரோனா கிருமித் தொற்றியோர் எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சியது டெல்லி