இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதியில்இருந்து பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம், தேசிய கிருமி ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து ஹைதராபாத் நகரை தலைமையிடமாகக் கொண்ட ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் ‘கோவாக்சின்’ என்ற தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.
இந்த மருந்தை மனிதர்களிடம் சோதனைக்கு உட்படுத்த இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அண்மையில் ஒப்புதல் தெரிவித்தது. இதையடுத்து கடந்த ஜூலை 7ஆம் தேதி முதல் தடுப்பு மருந்து மனிதர்களிடம் சோதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தடுப்பு மருந்து சோதனையை விரைவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சோதனை முயற்சி வெற்றி பெற்றால் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தடுப்பு மருந்தைப் பயன்படுத்தத் தொடங்கலாம் என்றும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு எழுதிய கடிதத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் டி.ஜி.பல்ராம் பார்கவா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே அகமதாபாத்தில் உள்ள ‘ஸைடஸ் காடிலா’ என்ற மற்றோர் இந்திய நிறுவனம் புதிய கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.
தற்போது இந்த மருந்தின் முதல்கட்ட சோதனை வெற்றியடைந்துள்ளது.
இதனால் இந்த மருந்தையும் மனிதர்களுக்கு செலுத்தி இரண்டு கட்டங்களாக பரிசோதனை செய்ய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது.
உலகம் முழுவதும் இதுவரை 17 தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு மனிதர்களிடம் சோதிக்கப்பட்டு வருகின்றன.