கொரோனா கிருமிப் பரவலைத் தடுப்பதற்காக முகக்கவசம், முகக்காப்பு போன்றவற்றை உலக மக்கள் அணிகின்றனர்.
பல்வேறு வடிவங்கள், தரங்களில் முகக்கவசங்கள் கிடைக்கின்றன. சிலர் கைக்குட்டை, துப்பட்டா, துண்டு, முந்தானை என தங்களிடம் இருப்பதையே முகக்கவசமாகப் பயன்படுத்துவதைக் காண முடிகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த சங்கர் குரேட் என்பவர் தங்கத்தினால் முகக்கவசம் தயாரித்து அதனை அணிந்து வருகிறார்.
ரூ.2.89 லட்சம் மதிப்புள்ள இந்த முகக்கவசத்தில் சிறிய துளைகள் இடப்பட்டுள்ளன. இதனால் சுவாசிப்பதில் அவருக்கு பிரச்சனை இல்லை.
ஆனால், கொரோனா நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்க இந்த முகக்கவசம் உதவுமா என்பது சந்தேகம்தான் என்கிறார் சங்கர்.
தங்க நகைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட சங்கர், தங்க முகக்கவசத்துடன் காணப்படும் புகைப்படங்களை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவலாக பகிரப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6.5 லட்சத்தை நெருங்கி உள்ள நிலையில், 18,655 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.
புனேயில் மட்டும் சுமார் 6000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 274 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.