சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை கொவிட்-19 பிடியில் இருந்து மீண்டு வர தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் அரங்கேற்றி வருகிறது.
இந்த நிலையில் அந்த நகருக்கு அடுத்த மிரட்டல் உருவாகிவிட்டதாக அபாயச் சங்கு ஊதப்பட்டு இருக்கிறது.
மழைக்காலம் தொடங்குவதை அடுத்து டெங்கிக் கொசுக்கள் தலைவிரித்தாடத் தொடங்கிவிடும் என்பதால் அதிகாரிகள் கொசுக்களைத் துடைத்தொழிக்க வெளியே தெரியாதபடி முயற்சிகளைத் தொடங்கி இருக்கிறார்கள்.
இப்போது கொவிட்-19 காரணமாக பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே தங்கி இருக்கிறார்கள் என்பதால் டெங்கி கொசு பரவல் அதிகரிக்கக்கூடும் என்று சென்னை மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள தெருக்களிலும் வட்டாரங்களிலும் கிருமிநாசினி மருந்து தெளிப்பது உள்ளிட்ட சுகாதாரப் பணிகளில் பிரித்துவிடப்பட்டு இருக்கும் கொசு ஒழிப்பு ஊழியர்கள், தங்களுடைய வழக்கமான பணிகளில் மறுபடியும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று மாநகர அதிகாரிகள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
வீட்டுக்கு வீடு சென்று கொசு இனப்பெருக்க இடங்களைக் கண்டறிந்து மருந்தடிப்பதுதான் இந்த ஊழியர்களின் வழக்கமான வேலை. கொவிட்-19 அதிகரித்து வருவதால் இந்த ஊழியர்கள் இப்போது கொரோனா தொடர்பான பணிகளில் பிரித்துவிடப்பட்டு இருக்கிறார்கள்.
செப்டம்பர் முதல் நவம்பர் வரைப்பட்ட காலகட்டத்தில் தலைநகரில் பொதுவாக டெங்கிக் காய்ச்சல் அதிகமாக தலைதூக்கும்.
டெங்கி காய்ச்சல் அறிகுறியும் கொவிட்-19 அறிகுறியும் ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு என்றும் அவர்கள் முன்னதாகவே எச்சரித்து இருக்கிறார்கள். தலைநகரில் டெங்கி ஒழிப்பு பணியும் தொடங்கிவிட்டது.