புதுடெல்லி: இந்தியாவின் அன்னிய முதலீடுகள் மீதான புதிய கண்காணிப்புக் கொள்கைகளை அடுத்து சீன நிறுவனங்களின் 50 புதிய முதலீடுகள் குறித்த முன்மொழிவுகளை மத்திய அரசு தீவிர ஆய்வு செய்து வருவதாக அரசுக்கு நெருங்கிய வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை எதிர்த்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. சீனப்பொருட்களுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இருப்பினும் இந்தியாவில் பயன்படுத்தப்படும் பொருட்களில் முக்கால்வாசி சீனத் தயாரிப்பாக உள்ளன.
இந்தியச் சந்தையில் விற்பனை செய்யப்படும் திறன்பேசிகளில் ஓப்போ, சியோமி போன்ற சீனத் தயாரிப்புகளே அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. இதற்குக் காரணம், வசதி குறைந்தவர்களும் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் குறைந்த விலையில் கவர்ந்திழுக்கும் வடிவமைப்பைக் கொண்டுள்ளன சீனத் திறன்பேசிகள்.
இந்நிலையில் 4ஜி தொழில்நுட்பத்திற்கு சீன சாதனங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது.
அத்துடன் இந்தியாவின் ‘கெய்ட்’ என்றழைக்கப்படும் அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு சீனாவில் இருந்து இறக்குமதியாகும் 500 வகையான பொருட்களைப் புறக்கணிக்கப் போவதாக கடந்த மாதம் அறிவித்தது.
‘இந்தியப் பொருட்கள் எங்கள் பெருமை’ என்ற புதிய பிரசாரத்தையும் அந்த அமைப்பு தொடங்கியது.
சீனப் பொருட்களை அதிக அளவில் புழக்கத்தில் கொண்டுள்ள இந்தியா, சீனாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக உள்ளது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியா, தன் அண்டை நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் முதலீடுகள் குறித்து புதிய விதிமுறைகளை அறிவித்தது. அதன்படி அம்முதலீடுகள் பரிசீலிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்தப் புதிய விதிமுறைகளின்படி மத்திய அரசின் ஒப்புதலுடன் தான் முதலீடுகள், கூடுதல் நிதி முதலீடுகள் அனுமதிக்கப்படும்.
பெரியளவில் முதலீடு செய்யும் சீன முதலீட்டாளர்கள் இந்தியாவின் புதிய கட்டுப்பாடு குறித்து கவலை தெரிவித்துள்ளதோடு சீன நிறுவனங்களைத் தனிமைப்படுத்தி இந்தியா பாகுபாடு காட்டுவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக நஷ்டத்தை எதிர்நோக்கும் நிறுவனங்களைக் கையகப்படுத்த சீன நிறுவனங்கள் முயற்சி செய்யலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் எல்லைப்பிரச்சினையால் சீனாவுடனான தொழில்ரீதியான தொடர்புகளை இந்தியா கொஞ்சம் கொஞ்சமாகத் துண்டித்து வருவதாகக் கூறப்படுகிறது.
சீன முதலீட்டாளர்கள் முதலீட்டு முன்மொழிவுகளுடன் ஏறக்குறைய 50 விண்ணப்பங்களைத் தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் சீன முதலீடுகள் 26 பில்லியன் டாலர்களுக்கும் மேல் இருக்கும் என்று ஆய்வு நிறுவனமான புரூக்ஸ் கடந்த மார்ச்சில் கூறியது.