புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 7.5 லட்சத்தை நெருங்கி உள்ளது.
செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் நாடு முழுவதும் 22,752 பேர் புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
எண்ணிக்கை பெரிதாகத் தெரிந்தபோதிலும் உலகளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா கிருமியின் பாதிப்பு மிகக் குறைவு என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ஒப்பீட்டுத் தரவுகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
“உலகளவில் 10 லட்சம் பேரில் சராசரியாக 1,453 பேருக்கு கொவிட்-19 பாதிப்பு உள்ளது. ஆனால், இந்தியாவில் இந்த எண்ணிக்கை 505ஆக மட்டுமே உள்ளது,” என மத்திய அரசு சுட்டிக் காட்டியுள்ளது.
சிலி நாட்டில் 10 லட்சம் பேருக்கு 14,459 பேர் கொவிட்-19 நோயால் பாதிக்கப்படுகின்றனர். பெருவில் இந்த எண்ணிக்கை 9,070 ஆகவும் அமெரிக்காவில் 8,560 ஆகவும் பிரேசிலில் 7,419ஆகவும் உள்ளது என மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிருமித்தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துவிட்டாலும் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவுதான் என்றும் அந்த அமைச்சு அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
தற்போது உலகளவில் கொரோனா இறப்பு விகிதம் 10 லட்சம் பேரில் 68 ஆக உள்ள நிலையில் இந்தியாவில் 14 பேர் மட்டுமே உயிரிழக்கின்றனர்.
புதன்கிழமை காலை சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையின்படி நாடு முழுவதும் மேலும் 482 பேர் பலியான நிலையில் ஒட்டுமொத்த மரண எண்ணிக்கை 20,642 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 2,64,994 பேர் கொவிட்-19 நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 4,56,830 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதன்கிழமை காலை நிலவரப்படி தெலுங்கானா, கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் மிக விரைவில் அவை அபாயகரமான பகுதிகள் என்ற நிலையை எட்டிப்பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கானாவில் புதிய பாதிப்புச் சம்பவங்கள் 9 நாட்களில் இரட்டிப்பாகி உள்ளன.
அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் தெலுங்கானா 6ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. இப்பட்டியலில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
மும்பையில் இதுவரை சுமார் 86 ஆயிரம் பேர் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். 23 ஆயிரத்து 359 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா: சுமார் 7.5 லட்சம் பேர் பாதிப்பு; 20,642 பேர் உயிரிழப்பு