திருவனந்தபுரம்: தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பெண்ணுக்கும் கேரள முதல்வர் அலுவலகம் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லையென அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்கக் கடத்தல் விவகாரத்தில் எந்தக் குற்றவாளியையும் கேரள அரசு ஒருபோதும் காப்பாற்றாது என்று குறிப்பிட்டார்.
“தங்கக் கடத்தலையும் கேரள அரசையும் தொடர்புப்படுத்திப் பேசுவது சரியல்ல. இவ்விவகாரத்தில் அரசுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை. ஐக்கிய அரபுச் சிற்றரசின் தூதரகம் மூலமாகவே தங்கம் கொண்டு வரப்பட்டுள்ளது,” என்றார் முதல்வர் பினராயி விஜயன்.
நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மத்திய அரசின் கீழ் இயங்கி வருவதாக சுட்டிக் காட்டிய அவர், மாநில அரசுகள் இவ்விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது என்றார்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு சிற்றரசின் தூதரகத்துக்கு உணவுப் பொருட்கள் என்ற பெயரில் தங்கம் கடத்தி வரப்படுவதாக அண்மையில் ஓர் அதிர்ச்சித் தகவல் வெளியானது. இதையடுத்து விமானத்தில் வந்திறங்கிய தூதரகத்துக்கான பார்சலை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அதில் 30 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது.
இதன் அனைத்துலக சந்தை மதிப்பு 15 கோடி ரூபாய் ஆகும். முதற்கட்ட விசாரணையின்போது கேரள தகவல் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றும் சுவப்னா என்பவருக்கு இந்தக் கடத்தலில் தொடர்பிருப்பதாகத் தெரியவந்தது. இந்நிலையில் அவர் திடீரென தலைமறைவாகி உள்ளார். இதையடுத்து கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலர் சிவசங்கரிடம் விசாரணை நடக்கிறது.