ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட 89 செயலிகளைப் பயன்படுத்த தடை
புதுடெல்லி: ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட 89 முக்கிய செயலிகளை தங்கள் கைபேசிகளில் இருந்து உடனே அழித்துவிடுமாறு ராணுவ வீரர்களை ராணுவத் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.
ராணுவ வீரர்களிடம் உள்ள கைபேசி செயலிகள் மூலம் ராணுவ ரகசியங்கள் திருடப்படுவதாக எழுந்துள்ள சந்தேகத்தை அடுத்து 89 செயலிகளையும் உடனே நீக்கி விடும்படி இந்திய ராணுவம் வீரர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. ஜூலை 15ஆம் தேதிக்குள் அந்த செயலிகளை நீக்காத வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ராணுவத் தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
முதல்வரைக் காணவில்லை என வழக்கு
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடந்த 10 நாட்களாக ஹைதராபாத்தில் இல்லை என்றும் அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியாததால் அவர் குறித்த தகவல்களை வெளியிடும்படி மாநில அரசுக்கு உத்தரவிடக்கோரியும் அரசியல் ஆர்வலர் நவீன் குமார் மாநில உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
“முதல்வரின் அரசு இல்லத்தில் 30க்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறு கிறது. இதனால் முதல்வரின் உடல்நிலை குறித்த கவலை ஏற்பட்டுள்ளது. அவர் எங்கு, என்ன நிலையில் இருக்கிறார் என்பதை தெரிவிக்கும்படி மாநில நிர்வாகத்திற்கு உத்தரவிடவேண்டும்,” என மனுவில் கோரியுள்ளார்.
நீரவ் மோடியின் ரூ.329 கோடி சொத்துகளை முடக்க உத்தரவு
புதுடெல்லி: வங்கி மோசடி வழக்கில் சிக்கியுள்ள வைர வியாபாரி நீரவ் மோடியின் ரூ.329 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்க தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மும்பை வொர்லி பகுதியில் உள்ள ‘சமுத்ர மஹால்’ எனும் குடியிருப்பு, அலிபாக் பகுதியில் உள்ள நிலம், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் உள்ள காற்றாலை நிறுவனம், லண்டனில் உள்ள ஒரு குடியிருப்பு, ஐக்கிய அரபு சிற்றரசில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், பங்குகள், வங்கி வைப்புத்ெதாகைகள் ஆகியவை முடக்கப்பட்டு உள்ளன.
தொலைக்காட்சி வழி பாடம் கற்பிப்பு
ஈரோடு: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இணையம் வழி கல்வி கற்பிக்கப்படும் என நேற்று முன்தினம் கூறியிருந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தில் பேசியபோது, “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இணையம் வழி வகுப்பு நடத்தப்படாது; தொலைக்காட்சி மூலமாகவே பாடம் கற்பிக்கப்படும். பிளஸ்-2 வகுப்புக்கான எஞ்சிய ஒரு தேர்வை எழுதாத மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கமுடியாது. மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தால் எழுதலாம்,” என்று கூறியுள்ளார்.