போபால்: உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் எட்டு காவலர்களைக் சுட்டுக்கொன்றுவிட்டு, தப்பியோடிய பிரபல ரவுடி விகாஸ் துபேயை நேற்று காலை மத்தியப்பிரதேச போலிசார் கைது செய்தனர்.
தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த விகாஸ் துபேயைப் பிடித்துக் கொடுப்பவர் களுக்கு ரூ.2.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் போலிசார் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.
விகாஸ் துபே கைதான தகவலை மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவும் உறுதிப்படுத்தினார்.
மத்தியப்பிரதேச மாநிலம், உஜ்ஜைன் நகரின் பிரபல மஹா காலபைரவர் கோயிலுக்குள் நுழைய முயன்றபோது விகாஸ் துபே கைது செய்யப்பட்டதாக அம்மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங்கும் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து ஆஷிஷ் சிங் கூறும்போது, “உபி போலிசாரால் தேடப்பட்டு வந்த விகாஸ் துபே நேற்று காலை மஹா காலபைரவர் கோயிலுக்கு வந்தார். அங்கிருந்த கோயிலின் பாதுகாவலர்கள் அவரை அடையாளம் கண்டு போலிசுக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து துபே கைதானார்,” என்றார்.
ஆனால், மஹா காலபைரவர் கோயிலுக்கு தான் செல்லப்போவதாக விகாஸ் துபேவே முன்னதாக காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாகவும் மற்ற சில ஊடகத் தகவல்களும் குறிப்பிட்டுள்ளன.
60க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, கடத்தல் வழக்குகளில் ரவுடி விகாஸ் துபேவுக்கு சம்பந்தம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவரை ஒரு கொலை வழக்கின் தொடர்பில் கைது செய்ய உத்தரப் பிரதேச போலிசார், கான்பூரின் பிக்ரு கிராமத்தில் உள்ள விகாஸ் துபேயின் வீட்டுக்கு கடந்த ஜூலை 2ஆம் தேதி சென்றனர்.
அப்போது, விகாஸ் துபே தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் எட்டு போலிசார் உயிரிழந்தனர்.
ஒரு துணை போலிஸ் கண் காணிப்பாளர், மூன்று துணை போலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட எட்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிழந்தனர். அத்துடன், ஆறு போலிசார் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்துக்கு பிறகு கான்பூரில் இருந்து தப்பி ஓடிய விகாஸ் துபேயை உத்தரப் பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் போலிசார் தீவிரமாகத் தேடத் தொடங்கினர்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் காலை விகாஸ் துபேயின் முக்கிய கூட்டாளிகளான அமர் துபே, பஹுவா துபே ஆகிய இருவரும் போலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகினர்.