புதுடெல்லி: கடந்த 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா தற்போதைய ஊரடங்கு காரணமாகப் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நிலமையைச் சமாளிக்க ரூ. 20 லட்சத்து 97 ஆயிரம் கோடி மதிப்பிலான நிவாரணத் திட்டங்களை அரசு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘இந்தியா குளோபல் வீக் -2020’ என்ற தலைப்பில் நடைபெறும் மூன்று நாள் அனைத்துலக மாநாட்டை காணொளி வழி தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
“இந்தியா தனக்கு ஏற்படும் சவால்களை, அது சமூக ரீதியிலான சவால்களாக இருந்தாலும் அல்லது பொருளாதார சவால்களாக இருந்தாலும் அவற்றை வென்று சாதனை படைத்து இருப்பதை வரலாறு காட்டுகிறது.
“இந்தியர்கள் இயற்கையிலேயே சீர்திருத்தவாதிகள். இந்தியா எப்போதும் தன்னை புதுப்பித்துக் கொண்டு வளர்கிறது. முடியாது என்று சொல்லப்படுவதை சாதித்து காட்டும் உத்வேகம் இந்தியர்களிடம் உள்ளது,” என்று மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்றும் உலக நன்மைக்காகவும் வளத்துக்காகவும் தேவையான அனைத்தையும் செய்ய இந்தியா தயாராக இருக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.