பொருளாதார மந்தநிலையைச் சமாளிப்பதற்கு ஏற்ப இந்தியாவின் ரிசர்வ் வங்கி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவ்வங்கியின் ஆளுநர் சந்திரகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா கிருமித் தொற்று விவகாரம் காரணமாக கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாடு சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று டெல்லியில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய அவர், நாட்டின் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பில் கொவிட்-19 பாதிப்பானது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதாகச் சுட்டிக் காட்டினார்.
"முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உற்பத்தி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் கொரோனா விவகாரம் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. எனவே, நிதி அமைப்பைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பொருளாதார பாதிப்புகளைச் சரி செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன," என்றார் ஆளுநர் சந்திரகாந்த தாஸ்.
மேலும் பிப்ரவரி 2019 முதல் நடப்பாண்டில் கொரோனா தாக்கம் தொடங்கும் வரை ஒட்டுமொத்த அடிப்படையில் வட்டிக் குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.