புதுடெல்லி: பத்மநாப சுவாமி கோவில் தொடர்பான வழக்கில் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அக்கோவில் மீது திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு உரிமை உள்ளது என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பிரசித்திபெற்ற திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் நிர்வாகத்தை கேரள அரசு தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடிவு செய்தது. இது தொடர்பான வழக்கில் கேரள அரசுக்கு ஆதரவாக கடந்த 2011ஆம் ஆண்டு அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் உச்சநீதிமன்றத்தை அணுகியது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இதுவரை கோவில் நிர்வாகத்தைக் கவனித்து வந்த மன்னர் குடும்பத்தின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பத்மநாப சுவாமி கோவில் மீது மன்னர் குடும்பத்துக்கு உரிமை உள்ளது என்றும் கோவில் நிர்வாகத்தை மேற்பார்வையிட திருவனந்தபுரம் மாவட்ட நிர்வாகத் தலைமையின் கீழ் இடைக்கால குழு ஒன்றை அமைக்க அனுமதி அளித்தும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாப சுவாமி கோவில் நாட்டின் மிகப் பணக்காரக் கோவில் என்று கருதப்படுகிறது.
அக்கோவிலில் உள்ள சில ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகளும், விலை மதிப்பான பொருட்களும் உள்ளன.
இதனால் மன்னர் குடும்பத்தார் தொடுத்த வழக்கு முக்கியத்துவம் பெற்றது. இந்நிலையில் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் மன்னர் குடும்பத்துக்குச் சாதகமாக தீர்ப்பளித்துள்ளது.