புதுடெல்லி: கொரோனா கிருமித் தொற்றால் தொடர்ந்து பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொவிட்-19 நோயிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் புதிதாக 28,701 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை சுமார் 8.78 லட்சமாக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை வரை நாடு முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 22,674 ஆக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை சுமார் 5.53 லட்சமாக அதிகரித்துள்ளது. இப்போது சுமார் 3 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குணமடைந்தோர் விகிதம் 63 விழுக்காடாக உள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகம். அங்கு இதுவரை 10,289 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக டெல்லியில் 3371 பேரும், குஜராத்தில் 2045 பேரும் தமிழகத்தில் 1,966 பேரும் பலியாகி உள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 932, மத்தியப்பிரதேசத்தில் 653 உத்தரப்பிரதேசத்தில் 934 ராஜஸ்தானில் 510, தெலுங்கானாவில் 356, ஆந்திராவில் 328 பேர் பலியாகி உள்ளனர்.
மிகக் குறைவாக திரிபுரா, அருணாச்சலப்பிரதேசத்தில் தலா 2 பேரும் மேகாலயாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் 2.54 லட்சம் பேரும், டெல்லியில் 1.12 லட்சம் பேரும் குஜராத்தில் சுமார் 41 ஆயிரம் பேரும், கொவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இம்மாநிலங்களில் சுமார் 60 விழுக்காடு நோயாளிகள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.

