சென்னை: தண்டனைக் காலத்தை முறைப்படி அனுபவித்து விடுதலைக்கான தகுதியை சசிகலா (படம்) அடைந்துவிட்டதாகவும் கொரோனா கிருமித்தொற்று காரணமாக விடுதலையாகி வெளியே வர அவர் விரும்பவில்லை என்றும் தமிழகத்தின் வார ஏடு ஒன்று தெரிவித்துள்ளது.
சசிகலா தரப்பினருடன் தொடர்புகொண்டு சேகரித்த தகவல்களை அந்த ஏட்டின் செய்தியாளர் விவரித்துள்ளார்.
“தண்டனைக் காலத்தை அனுபவித்து முடித்து விடுதலையாகி வெளியே வருவதற்கான தகுதியை அடைந்துவிட்டார். ஆனால், சில கட்சிகள் பாஜக உதவியுடன் சீக்கிரம் வெளியே வருவதாகத் தவறான தகவல்களை கிளப்பிவிடுகின்றன.
“தொடக்கத்தில் சிறையில் இருந்த நாட்கள், தண்டனை அனுபவித்து முடித்த நாட்கள் மற்றும் சிறை விதிகளின்படி கிடைக்கும் நன்னடத்தைக்காக கழிக்கப்படும் நாள்கள் இவையெல்லாம் சேர்த்து 4 ஆண்டுகளுக்கான தண்டனை முடிந்துவிட்டது.
“இதையடுத்து, சசிகலா வெளியே வருவதற்கான பணிகள் தொடங்கிவிட்டது. அபராதத் தொகை ரூ.10 கோடியை செலுத்த வேண்டும். அதற்கான பணிகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
ஆனால், கொரோனா பரவுதல், பொதுப் போக்குவரத்து முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் இப்போது வெளியே வருவதை அவர் விரும்பவில்லை. இப்போது வந்தால் பெரிய அளவில் தமது செல்வாக்கை காட்ட முடியாது. அத்துடன் வீட்டிலேயே அடைப்பட்டு கிடக்க வேண்டும். கட்சிப் பணிகள் எதையும் பார்க்கமுடியாது. யாரையும் சந்திக்க முடியாது. தன்னைப் பார்ப்பதற்கும் யாரும் வரமுடியாது.
“இதுபோன்ற காரணங்களால் சிறையிலிருந்து வெளியே வந்தது ஒரு செய்தியாக மட்டுமே இருக்கும்; பெரிய மாற்றத்தை உண்டாக்காது என நினைக்கிறார் சசிகலா.
“தவிர, `இதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டோம்... நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தோம். நம்மை விட்டுச் சென்ற அனைத்தும் நம் கைக்கு கிடைக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தை நாம் கைப்பற்ற வேண்டும். அதற்கு நான் வெளியே வருவது மாற்றத்தை உண்டாக்குவதுடன் பெரிய பரபரப்பையும் ஏற்படுத்த வேண்டும்’ என கணக்கு போடுகி றார்.
“தான் வந்த பிறகு ஒவ்வொரு நாளும் அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழவேண்டும் என விரும்புகிறார் சசிகலா.
“அதற்காகத்தான் அவர் சிறை யிலிருந்து வெளியே வருவது தள்ளிப்போகிறது. விடுதலையாகி வெளியே செல்ல அரசு தரப்பில் அவருக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுவிட்டது. அபராதத் தொகை
ரூ.10 கோடியை செலுத்திய சில தினங்களில் அவர் வெளியே வந்துவிடுவார்,” என சசிகலா வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறியதாக வார ஏடு தெரிவித்துள்ளது.
விடுதலைக்கு தகுதிபெற்றும் அரசியல் கனவுகளை முடக்கிய கொரோனா அச்சம்