சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே முடுக்கூரணியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஸ்டீபன், 32. தற்போது சீனாவுடன் எல்லைப் பிரச்சினை நடந்து வரும் லடாக் பகுதியில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது தந்தை சந்தியாகு, 66, ஓய்வுபெற்ற ராணுவ வீரர். தாயார் ராஜகுமாரி, 61 மற்றும் மனைவி சிநேகா, 30. இம்மூவரும் ஸ்டீபன்-சிநேகாவின் ஏழு மாதக் குழந்தையும் சொந்த ஊரில் வசித்து வந்தனர்.
சந்தியாகு நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள தோட்டத்திற்குச் சென்றுவிட்டார். வீட்டிற்குள் சினேகாவும் குழந்தையும் தூங்கினர். வாயிற்புறத்தில் ராஜகுமாரி தூங்கினார். கதவை வெளிப்புறமாக பூட்டி சாவியைத் தலையணை அடியில் அவர் வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு வீட்டிற்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் ராஜகுமாரியை இரும்புக் கம்பியால் தாக்கியது. சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
சாவியை எடுத்து கதவைத் திறந்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் சினேகாவை படுக்கையிலேயே கம்பியால் தாக்கிக் கொன்றனர். ஆனால் குழந்தை யை எதுவும் செய்யவில்லை. இறந்தவர்கள் அணிந்திருந்த நகைகள், பீரோவில் இருந்த நகைகள் என 75 பவுன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இரண்டு சடலங்களுக்கு இடையில் குழந்தை அழ ஆரம்பித்தது. விடியும் வரை நீண்ட நேரம் அழுத குரலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தனர்.
இரு பெண்கள் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக போலிசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும் மோப்ப நாயுடன் அதிகாரிகள் விரைந்து சென்றனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். காளையார்கோவில் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொள்ளையர்களைப் பிடிக்க ஐந்து தனிப்
படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் சில ஆதாரங்கள் சிக்கி இருப்பதாகவும் சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் கூறினார்.